வாசன் கட்சியின் புதிய கொடி நாளை சென்னையில் அறிமுகம்!
சென்னை: சென்னையில் நாளை தனது புதிய கட்சியின் கொடியானது அறிமுகப்படுத்தப்படும் என்று ஜி,கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் காங்கிரஸிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்கப் போவதாக நவம்பர் 3 ஆம் தேதி அறிவித்தார். கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வரும் 28 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மயிலாப்பூரில் நடந்த கட்சியின் தொழிலாளர் அணி கூட்டத்தில் கவிஞர் ரவிபாரதி தயாரித்த கட்சியின் கொள்கை விளக்க பாடல்கள் அடங்கிய சி.டி இன்று வெளியிடப்பட்டது. அதை ஜி.கே.வாசன் வெளியிட ஞானதேசிகன் பெற்றுக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாசன், "புதிய இயக்கம் ஆரம்பித்தது முதல் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களும் ஆதரவளித்து வருகிறார்கள். வருகிற 28 ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்சியில் லட்சக்கணக்கானோர் திரளுவார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களது ஆசையை நிறைவேற்றும் வகையில், கட்சி கொடியை கையில் ஏந்தி செல்வதற்காக கட்சியின் புதிய கொடியை நாளை காலை 10 மணிக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
இன்று தொழிலாளர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. எங்கள் இயக்கம் தொழிலாளர் நலன் சார்ந்த இயக்கமாக இருக்கும். அவர்கள் எதிர்பார்ப்பை எப்போதும் பிரதிபலிப்போம்.
புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்று பெயர் சூட்ட பலர் விருப்பம் தெரிவித்தனர். எல்லோருடைய விருப்பத்தின் படியும் தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்கும் பெயர் புதிய இயக்கத்துக்கு வருகிற 28 ஆம் தேதி சூட்டப்படும். எங்கள் இயக்கம் மக்கள் நலனை காக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும். புதிய கலாச்சாரத்துக்கு முன்னணி இயக்கமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சென்னையில் எங்கு வைத்து கொடி அறிமுகம் நடைபெறும் என்பதை வாசன் தெரிவிக்கவில்லை.