அழகிரியைத் தொடர்ந்து திமுகவில் உருவெடுக்கிறது "கனிமொழி புயல்"?
சென்னை: திமுகவில் வீசிக் கொண்டிருந்த அழகிரி புயல் கரையைக் கடந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில் கனிமொழியை மையம் வைத்து புயல் உருவெடுப்பதாக கூறப்படுகிறது.
திமுகவைப் பொறுத்தவரையில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த அவரது மகன் மு.க. ஸ்டாலின்தான் 'இளவரசராக' ஏற்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மு.க. அழகிரி, கனிமொழி என அடுத்தடுத்த வாரிசுகளும் களத்தில் குதித்துவிட்டன.
திமுக என்ற அமைப்பிலும் சரி திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி மு.க. ஸ்டாலின் என்ன மாதிரியான ஏற்றத்தைப் பெற்றாலும் அதற்கு இணையான அல்லது கூடுதலான பதவி தமக்கு தேவை என்பதில் மு.க. அழகிரி விடாப்பிடிவாதமாகவே இருந்து வருகிறார். மு.க .ஸ்டாலினும் அழகிரியைவிட தமக்கு கூடுதலான பொறுப்பு இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவதை அறிவாலய வட்டாரங்கள் நன்கு அறியும்.
மத்திய அமைச்சர் vs துணை முதல்வர்
டெல்லியில் மு.க. அழகிரி மத்திய அமைச்சராக பொறுப்பேற்று சென்னை வருவதற்குள் துணை முதல்வர் பொறுப்பை மு.க. ஸ்டாலின் ஏற்றார் என்பதையே இதற்கு சாட்சியாக சுட்டிக் காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.... இவர்களுக்கு நடுவில் அதிகார யுத்தத்துக்கு தம் பங்குக்கும் அடி போட்டார் கனிமொழி
களத்துக்கு வந்த கனிமொழி
கட்சி அமைப்பில் ஸ்டாலினுக்கு போட்டியாக தமக்கும் ஆதரவாளர் வட்டத்தை உருவாக்க கனிமொழி வெகுதீவிரமாகவே வெகு காலமாகவே முயன்று வருகிறார். இதற்காகவே திருவள்ளூர், விழுப்புரம் போன்ற இடங்களில் மாநாடுகளுக்கும் கூட கனிமொழி ஏற்பாடு செய்தார். ஆனால் ஸ்டாலின் தரப்பு இதை வளரவிடவில்லை.
அழகிரியுடன் கை கோர்ப்பு
இதனாலேயே மதுரையில் மு.க. அழகிரியுடன் ஒரு கட்டத்தில் கை கோர்த்தார் கனிமொழி. இந்த கால கட்டத்தில்தான் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியுடனான உறவையே துண்டித்தது திமுக.
அழகிரிக்கு செக் - காங்கிரஸ் உறவு முறிவு
காங்கிரஸ் ஆதரவை விலக்கியது ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் கூட ஸ்டாலின் தரப்பு இதை அழகிரிக்கான ஒரு செக்காகவே கருதியது. இதனை புரிந்து கொண்டவராகவே மு.க. அழகிரியும் கூட காங்கிரஸூடனான உறவு முறிவு விவகாரத்தை ஜீரணிக்க முடியாத நிலையில் இருந்தார்.
அழகிரியின் பதிலடி
இதனாலேயே மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தாமாதமாகவே விலகியதுடன் பிரதமர் மன்மோகன்சிங் முதல் காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் தனித்தனியே பேசி "நெருக்கத்தை" வெளிப்படுத்தி ஸ்டாலின் தரப்பை கோபப்படுத்திப் பார்த்தார். இந்த ஆதங்கத்தை அண்மையில் கூட புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அழகிரி கொட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொந்தளித்த அழகிரி
இப்படியான மோதலின் உச்சமாகவே பொருளாளர் பொறுப்பை மட்டும் ஸ்டாலின் பார்க்கட்டும்... கட்சித் தலைவர் போல் செயல்படுவதா? என கருணாநிதியிடம் அழகிரி கொந்தளிக்கப் போய் புயல் விஸ்வரூபமெடுத்தது.. கடைசியாக அழகிரி கட்சியைவிட்டே நிரந்தரமாக நீக்கப்படும் நிலையும் உருவாகிப் போனது.
சமாதனமானார் அழகிரி?
இந்நிலையில் சென்னைக்கு நேற்று வந்த அழகிரி, புயல் கரையைக் கடந்தது போல திமுகவில் சமாதானமாகிவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை செய்தியாளர்களிடம் காட்டிவிட்டுப் போனார். அதே நேரத்தில் காங்கிரஸுடனான திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் கூடவே கூடாது என்று மு.க. ஸ்டாலின் இப்போதும் பிடிவாதமாக இருப்பதும் கூட மற்றொரு அதிகாரப் போட்டியாளரான கனிமொழிக்கு எதிரான அஸ்திரம் என்கின்றனர் மூத்த திமுக நிர்வாகிகள்.
காங்கிரஸுக்காக மல்லுக்கட்டும் கனிமொழி
தம் மீது ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் காங்கிரஸ்- திமுக உறவு விரிசலை விரும்பாதவராகவே இருந்தார் கனிமொழி. ஆனால் திமுக பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது முதல் இது தமக்கான செக் என்பதை கனிமொழியும் புரிந்து கொண்டவராகவே செயல்பட்டார்.
வழக்கை இறுக்கிய காங்கிரஸ்
அத்துடன் திமுக பொதுக்குழு முடிந்த கையுடன் கனிமொழி மீதான ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசும் இன்னமும் இறுக்கம் காட்ட, காங்கிரஸுடன் நெருக்கம் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கனிமொழி. அதாவது ஸ்பெக்ட்ரம் வழக்கில் அன்னிய செலாவணி மோசடி பிரிவின் எந்த நேரமும் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகின. இதன் விளைவுதான் திமுக பொதுக்குழு முடிவுக்குப் பின்னரும் கூட மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை சென்னைக்கு அழைத்து கருணாநிதியை கனிமொழி சந்திக்க வைத்தது என்றும் கூறப்படுகிறது.
கனிமொழி முகாமில் தயாநிதி?
இதுநாள் வரை ஸ்டாலின் முகாமில் இருந்த தயாநிதி மாறனும் கூட காங்கிரஸ் கூட்டணி அவசியம் என்பதால் கனிமொழியுடன் கை கோர்க்க தொடங்கிவிட்டதாகவே சொல்லப்படுகிறது.
தொலைபேசி உரையாடல்
மேலும் கனிமொழிக்கு கூடுதல் சிக்கல் கொடுக்கும் வகையில் கலைஞர் டிவி நிர்வாகியாக இருந்த சரத்குமாருக்கும் காவல்துறை அதிகாரியான ஜாபர்சேட்டுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. காங்கிரஸுடனான உறவு விவகாரத்தில் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்த கனிமொழிக்கு இந்த உரையாடல் கசிவு விவகாரம் கூடுதல் நெருக்கடியை கொடுத்தது என்கின்றனர் திமுகவினர்.
ஓரம்கட்டும் முயற்சி?
ஸ்பெக்ட்ரம் வழக்கு விவகாரத்துடன் தம்மை கட்சியில் ஓரம்கட்டுவதற்கான மும்முரத்தின் உச்சமாகவே இந்த தொலைபேசி உரையாடல் வெளியானது என்றும் கனிமொழி தரப்பு கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.
புதிய கனிமொழி புயல்?
இப்படி காங்கிரஸ் உறவு முறிவு, ஸ்பெக்ட்ரம் வழக்கு தொலைபேசி உரையாடல் வெளியீடு என கனிமொழியை மையமாக வைத்து தொடரும் "காற்றழுத்த தாழ்வு" நிலைதான் திமுகவின் அடுத்த புதிய புயலாக உருவெடுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.