நெல்லை மருத்துவ கல்லூரியில் பெண்களுக்கு சகல வசதியோடு புதிய வார்டு.. மகப்பேறு மகளிருக்கு பலன்
நெல்லை : நெல்லை அரசு மருத்துவமனையில் மகளிருக்காக புதிய வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பாரா மெடிக்கல் மாணவர்கள், நான்கு மாவட்ட டாக்டர்கள் பயிற்சி மையமும் அமைய உள்ளது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 2000 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.
1500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள மகப்பேறு வார்டில் தென் மாவட்டங்களை சேர்ந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் சேர்க்கப்படுகின்றனர். பழைய மகளிர் வார்டில் சுமார் 120 படுக்கைகளும், புதிதாக கட்டப்பட்டுள்ள சீமான் கட்டிடத்தில் 240 படுக்கை வசதிகளும் உள்ளன.
ஆனால் நாள்தோறும் இங்கு சிகிச்சைக்காக 350 பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 200 பேர் குழந்தை பெற்ற நிலையில் சிகிச்சை பெறுவதால் தொட்டிலுடன் படுக்கை வசதி செய்ய வேண்டியு்ளளது. ஆனால் இதற்கு இட பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் அதன் அருகே உள்ள இடத்தை சேர்ந்து ரூ.12.50 கோடியில் புதிய நான்கு அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்க தி்ட்டமிடப்பட்டுள்ளது. இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நவீன அறுவை சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் மருத்துவ சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.