திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் கவலைக்கிடம்?
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் எஸ்.எம். சீனிவேலின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியை கடந்த 2011 தேர்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கியிருந்தது அதிமுக. இதனால் அங்கு போட்டியிட்டு ஏ.கே.டி. ராஜா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த முறை அதிமுகவே நேரடியாக போட்டியிட்டது.
முன்னாள் எம்.எல்.ஏவான 65 வயது சீனிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2001ல் இங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் சீட் கிடைத்ததால் பெரும் ஆர்வத்துடன் சீனிவேல் தரப்பு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் சீனிவேல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து தற்போது வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சீனிவேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சீனிவேலின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அதிமுக தரப்பு கவலை அடைந்துள்ளது.