திருச்சி: திருமணமான 2 வாரத்தில் விபத்தில் கணவர் கண் முன் புது மணப்பெண் பலி
திருச்சி: திருச்சியில் திருமணமான இரண்டே வாரத்தில் புதுமணப் பெண் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
திருச்சி பொன்மலை ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் சதீஷ் பாபு(29). திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலிய உதவியாளராக உள்ளார். அவருக்கும் ரேவதி என்ற பத்மாவதிக்கும்(26) கடந்த 4ம் தேதி திருச்சியில் திருமணம் நடைபெற்றது.
சதீஷ் திங்கட்கிழமை காலை பணிக்கு சென்றுவிட்டார். ரேவதி அவரது தாய் மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து துணி எடுப்பதற்காக திருச்சி பெரிய கடை வீதிக்கு சென்றார். மதியம் பெரிய கடை வீதிக்கு வந்த சதீஷ் மனைவியை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார். பிற்பகல் 1.45 மணிக்கு அவர்களின் பைக்
தஞ்சை ரோட்டில் உள்ள கருப்பண்ண சாமி கோவில் அருகே செல்கையில் பைக் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது.
இதில் நிலைதடுமாறி விழுந்த ரேவதி பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சென்றுவிட்டார். சதீஷ் சாலையின் மறுபக்கம் விழுந்தார். ரேவதியின் தலையில் பேருந்து ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த சதீஷ் கதறி அழுதார்.
இதற்கிடையே பேருந்து டிரைவர் வாகனத்தோடு கிளம்பினார். அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர். மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த பகுதியில் தனியார் பேருந்துகளை இயக்கக் கூடாது என்று கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாகக் கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.