ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய சுபுஹானை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை
நெல்லை: ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய சுபுஹானை கடையநல்லூர் அழைத்து வந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், 6 ஐ.எஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் நெல்லை மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த சுபுஹானி என்பவரை கடந்த 3ம்தேதி என்ஐஏ (தேசிய புலனாய்வு பிரிவு) அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை விசாரணைக்காக கொச்சி அழைத்து சென்று அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான 6 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவர்களை என்ஐஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
இதனிடையே கேரளாவில் இருந்து சுபுஹானியை தேசிய புலனாய்வு பிரிவு எஸ்பி சவுகத் அலி தலைமையிலான சிறப்பு அதிகாரிகள் நேற்று காலை 10 மணிக்கு கடையநல்லூருக்கு அழைத்து வந்தனர். கடையநல்லூரில் அவர் வசித்து வந்த வாடகை வீட்டில் சோதனை நடத்தி அவர் பயன்படுத்திய 4 செல்போன்கள், 6 சிம்கார்டுகள், கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் சுபுஹானி வேலைபார்த்த நகைக்கடையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை கொச்சிக்கு அழைத்து சென்றனர். இதனால் கடையநல்லூரில் பரபரப்பு ஏற்பட்டது.