சாத்தூரில் ஓடும் பஸ்சில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு சம்பவம்... 9 பேர் கைது
விருதுநகர்: சாத்தூரில் அரசுப்பேருந்தில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி பகுதியில் 9 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளி இதுவரை பிடிபடவில்லை என்றும் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், நாகர்கோவிலில் இருந்து சாத்தூர் வழியாக கோவை செல்லும் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். சாத்தூர் அருகே படந்தால் சோதனைச்சாவடி நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, மர்மநபர்கள் கருப்பசாமியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கருப்பசாமி சம்பவ இடத்தில் பலியானார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அப்போது கொலையாளிகள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடியதாக தெரிகிறது. கருப்பசாமியின் நண்பர் என்னவானார் என்பதும் மர்மமாக உள்ளது. தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களின் உதவியுடன், போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இரவு கோவில்பட்டியைச் சேர்ந்த அப்துல்லா என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கருப்பசாமியின் சகோதரர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொடூரம் நடந்திருக்கலாம் என கருப்பசாமி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கருப்பசாமிக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஸ்ரிதரணிப் பிரியா என்ற மகளும் உள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் எஸ்.பி.ராஜராஜன் உத்தரவிட்டார். இதில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி அருகே 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பேருந்தில் கருப்பசாமியை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளியையும், அவரை கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கியையும் இதுவரை போலீசார் பறிமுதல் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications