காவேரி மருத்துவமனைக்கு வந்தார் நிர்மலா சீதாராமன்... கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிப்பு
காவேரி மருத்துவமனைக்கு வந்தார் நிர்மலா சீதாராமன்... கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிப்பு
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது.
இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து அவர் நள்ளிரவு 1 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சைக்கு பின்னர் ரத்த அழுத்தம் சீரானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தினகரன் உள்ளிட்டோர் நேரில் வந்து உடல்நலத்தை விசாரித்தனர்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக டுவிட்டரில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நலம் விசாரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவருடன் பாஜகவின் வானதி சீனுவாசனும் வந்திருந்தார்.