குட்கா பொட்டலத்தை சட்டசபையில் எம்எல்ஏக்கள் காட்டியதால் தான் நோட்டீஸ் - சட்டசபை செயலர்
அவையின் உரிமையை திமுக எம்எல்ஏக்கள் மீறியதற்கான முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் சட்டசபை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளார்.
சென்னை: குட்கா பொட்டலத்தை சட்டசபையில் காட்டியதால் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிமைக்குழு கொண்டு வந்த தீர்மானம் அடிப்படையில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று சட்டசபை செயலர் ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்டசபைக்கு அந்த பொட்டலங்களை கொண்டு சென்றனர்.

தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார். அதன்படி உரிமை குழு கூட்டம் கூடியது. அதில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரினார். அத்துடன் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 7ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். வாதங்களை தொடர திமுக தயாராக இருப்பதாக கூறினார்.
பேரவை செயலர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணன் ஆஜரானார். பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
சபாநாயகர், பேரவை செயலர் உரிமைக் குழு தலைவர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து இந்த வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே சட்டசபை செயலர் தனது பதில்மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், .இதனையடுத்து, தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலத்தை சட்டசபையில் காட்டியதால் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிமைக்குழு கொண்டு வந்த தீர்மானம் அடிப்படையில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அவையின் உரிமையை திமுக எம்எல்ஏக்கள் மீறியதற்கான முகாந்திரம் உள்ளது. திமுக எம்எல்ஏக்கள் பதிலளிக்க போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு முடிவு எடுக்கவில்லை.
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், அதில் அவர்கள் பங்கேற்காமல் இருக்க நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்று கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications