இந்தியாவில் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து ஆலோசிக்கவில்லை- மத்திய அமைச்சர் வெங்கையா
சென்னை: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கட்டுப்பாடுகள் என்ற பெயரில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications