நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.. குஷ்பு பேச்சு
திருச்சி: மீண்டும் 6-வது முறையாக முதல்வர் நாற்காலியில் கருணாநிதி உட்காருவார். கழக தோழர்கள் உறுதிமொழி எடுத்து, கழகத்திற்காகவும், தலைவருக்காகவும் பாடுபட வேண்டும். நாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மட்டுமே வெற்றி பெறும் என்று பேசியுள்ளார் நடிகை குஷ்பு.
திருச்சி திமுக மாநாட்டில் நேற்று பல்வேறு தலைவர்கள் பேசினர். அதில் நடிகை குஷ்புவும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.
அவருக்கு ஆதிக்கமன்ற சமுதாயம் அமைப்போம் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் தலைப்பில் அவர் பேசினார்.
குஷ்புவின் பேச்சிலிருந்து..
ஆதிக்கமற்ற சமுதாயம் இருக்கிறதா...
சுதந்திரம், சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு இதுதான் ஆதிக்கமற்ற சமுதாயம். ஆனால் தமிழகத்தில் ஆதிக்கமற்ற சமுதாயம் இருக்கிறதா? என்றால் ஒரு துளி கூட இல்லை என்று தான் சொல்வேன்.
மக்களிடம் பகுத்தறிவே கிடையாது
மூட நம்பிக்கையால் மக்கள் மூழ்கி கிடக்கிறார்கள். பகுத்தறிவு கிடையாது. சாதி, மத பிரச்சினையெல்லாம் மனிதர்களின் ஆதிக்கத்தால் உருவாகிறது.
அதிமுகவிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்த கருணாநிதி
ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலை வாங்கி தந்தவர் பெரியார். அதிமுக அரசிடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கித் தர தலைவர் கருணாநிதியால் மட்டுமே முடியும். தலைவர் கருணாநிதி பல்வேறு சாதனைகளை செய்தவர். அவரது சாதனைகளை ஓரிரு நாட்கள் அல்ல நாள் கணக்கில் பேசலாம்.
கருணாநிதியை அவமதித்த ஆதிக்க சக்தி
கருணாநிதிக்கு திரைமுகம் என மற்றொரு முகம் இருக்கிறது. சினிமாவில் மூத்த கலைஞரான அவருக்கு சினிமா நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு இல்லை. நிகழ்ச்சி நடத்தியவர்களோ கருணாநிதியை அழைத்தால் ஆட்சியாளர்கள் ஏதேனும் சொல்வார்களோ? என கூறி அழைக்காமல் இருந்து விட்டனர். இது தான் ஆதிக்க சக்தி.
கனவு காண்கின்றனர்... ஆனால் பலிக்காது
நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40-க்கு வெற்றி பெற்று பிரதமர் ஆகலாம் என அவர்கள் பகல் கனவு காண்கின்றனர். அவர்களது கனவு பலிக்காது. தமிழக மக்கள் யாரும் அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பாடுபடுகிற ஒரே தலைவர் கருணாநிதி மட்டும் தான்.
திமுக மட்டுமே வெல்லும்
வருகிற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக மட்டும் தான் வெற்றி பெறும். மக்கள் இதுவரை ஏமாந்தது போதும், இனியும் ஏமாறமாட்டார்கள். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தலைவர் கருணாநிதியிடம் சமர்ப்பிப்போம்.
மீண்டும் முதல்வராவார் கருணாநிதி
மீண்டும் 6-வது முறையாக முதல்வர் நாற்காலியில் கருணாநிதி உட்காருவார். கழக தோழர்கள் உறுதிமொழி எடுத்து, கழகத்திற்காகவும், தலைவருக்காகவும் பாடுபட வேண்டும். நாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றார் அவர்.
கனிமொழிக்குப் பக்கத்தில்
மாநாட்டில் கலந்து கொண்ட குஷ்பு, கனிமொழி எம்.பிக்கு அருகில் அமர்ந்திருந்தார்.