நதிநீர் தீர்ப்பாயத்துக்கு எதிர்ப்பு- காவிரி வழக்குகளை மாற்ற கூடாது: மத்திய அரசுக்கு எடப்பாடி கடிதம்
நிரந்தர நதி நீர் தீர்ப்பாயம் தேவை இல்லை என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் தேவை இல்லை என மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் மாநிலங்களுக்கு இடையேயான ஒவ்வொரு நதிநீர் பிரச்னையும் தனித்தன்மைகளை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நீரை பகிர்ந்து கொள்ள ஏற்படும் அனைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காண ஒரே நிரந்தர நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதைத் திசை திருப்பும் வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தில் கூறுகையில், நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் தேவை இல்லை. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைபோல் நதிநீர் வழக்குகளை அணுகக் கூடாது.
உச்சநீதிமன்ற உத்தரவின் படியே காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவில்லாமல் காவிரி வழக்குகளை புதிய அமைப்புக்கு மாற்றக்கூடாது. மாநிலங்களுக்கு இடையேயான ஒவ்வொரு நதிநீர் பிரச்னையும் தனித்தன்மைகளை கொண்டது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.