தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை: பொன். ராதாகிருஷ்ணன்
கோவை: தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆட்சியை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தை, பா.ஜ.க ஆளும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டியது அனைவரது கடமை. அ.தி.மு.க.வினர் நீதிமன்ற தீர்ப்பை மதித்துள்ளனர். அதன்படி புதிய முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பேருந்துகளை எரிப்பதா?
தங்களுடைய தலைவருக்கு ஆதரவாக தங்களது எதிர்ப்பை அமைதியான வழியில் தெரிவிப்பதை தவறு என்று சொல்ல முடியாது. அதற்காக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பேருந்துகளை தாக்குவது, தீ வைத்து எரிப்பது, திறந்திருக்கும் கடைகளை தாக்குவது போன்றவை தொடர்வது கண்டிக்கத்தக்கது.

போலீசார் நடவடிக்கை
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போது, அ.தி.மு.க.வினரே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும் ஏற்க இயலாது. கோவை பாஜக கவுன்சிலர் வத்சலாவின் காரை சமூக விரோதிகள் கடந்த வாரம் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும், விசாரணையோ கைது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

கலவரத்துக்கு துணை போவதா?
காவல்துறையினர் இது போன்ற செயல்களை கவனத்தில் கொள்ளவில்லை என்பது, கலவரத்துக்கு துணை போனதாக கருதப்படும்.

தடுக்கப்பட்டிருக்க வேண்டும்
தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய முதல்வர், அரசியல் கட்சி மற்றும் ஆளும் நிலை இரண்டையும், வேறுபடுத்தி பார்க்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது, புதிய அரசின் பொறுப்பு. தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆட்சியை அகற்றும் திட்டம்
ஓரிரு நாட்கள் நடந்த நிகழ்வுகளை கொண்டு, தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆனால் பாஜகவிற்கு ஆட்சியை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை.

பாஜக ஆளும் காலம்
நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தை பாஜக ஆளும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என, கருத வேண்டி உள்ளது.

ராம்ஜெத்மலானி
வழக்கறிஞர், ராம்ஜெத்மலானி, பல வழக்குகளில் தானாகவே வாதாடி வருகிறார். அது அவருடைய முடிவு.

தலைகுனிவு
தமிழகத்தில் இரண்டு, மூன்று நாட்கள் நடந்த நிகழ்வுகள், போலீசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளன என்று அவர் கூறினார். மேலும் கோவையை தொழில் வளம் நிறைந்ததாக மாற்ற, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications