கடவுள் வாழ்த்து பாடல்களுக்கு எப்போதும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை.. சொல்கிறார் எஸ்வி சேகர்!
கடவுள் வாழ்த்து பாடல்களுக்கு எப்போதும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என பாஜக பிரமுகரான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கடவுள் வாழ்த்து பாடல்களுக்கு எப்போதும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என பாஜக பிரமுகரான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் எச் ராஜாவின் தந்தையான மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுந்தது தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் பன்வாரிலால், எச் ராஜா உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றனர்.
தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு
ஆனால் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தியானத்தில் இருந்தார்
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் விளக்கமளித்தது. நாட்டிற்கு மரியாதை அளிக்கவே தேசியகீதம் இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நின்றதாகவும் சங்கரமடம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாகவும், இதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி விஜயேந்திரர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயேந்திரர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தமிழ் அமைப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
நிற்கவேண்டிய அவசியமில்லை
இந்நிலையில் விஜயேந்திரருக்கு ஆதரவாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் வரிந்து கட்டியுள்ளார். அதாவது கடவுள் வாழ்த்துகளுக்கு அனைத்து தருணங்களிலம் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என அவர் கூறியுள்ளார்.
ஆண்டாள் விவகாரம் திசை திருப்ப
கடவுள் வாழ்த்துக்கு பீடாதிபதிகள் எவ்வாறு மரியாதை செய்வார்களோ அந்த முறையில்தான் விஜயேந்திரரும் மரியாதை செலுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் வைரமுத்து விவகாரத்தை திசைதிருப்பவே விஜயேந்திரர் விவகாரத்தை பெரிதாக்குகின்றனர் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
கொந்தளித்த எஸ்வி சேகர்
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியது சர்ச்சையானது போது அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியவர் எஸ்வி சேகர். தான் ஆண்டாள் குறித்து பேசியதற்கு விளக்கமளித்து வைரமுத்து வீடியோ வெளியிட்ட போதும் அதனை ஏற்காமல் கடுமையாக வைரமுத்துவை விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்தவர் எஸ்வி சேகர் என்பது குறிப்பிடத்தக்கது.