ஓபிஎஸ் & சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பாஜக மேலிடம் அழுத்தம்? கட் & ரைட்டாக சொன்ன எடப்பாடி!
சேலம்: சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இணைப்பு விவகாரம் பற்றிய கேள்விக்கு நேரடியாக பதில் அளித்துள்ளார். பாஜக கூட்டணியில் அதிமுக இணையக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், ஓபிஎஸ், சசிகலா இணைப்பு பற்றி கட் அண்ட் ரைட்டாக பதில் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள பாஜக தலைமை அழுத்தம் கொடுக்கிறதாமே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "நீங்களாகவே ஒரு கற்பனை செய்து கொள்கிறீர்கள். காது மூக்கு கண் வைத்து எதையாவது சொல்கிறீர்கள். தினந்தோறும் அதிமுக பற்றி செய்தி வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களாகவே கேள்வி கேட்கிறீர்கள்.
100% அப்படி எதுவும் இல்லை. திரும்பத் திரும்ப பலமுறை சொல்லிவிட்டோம். அதிமுக மிகச் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்லும் நபர்கள் யாரையும் இந்த இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதாக இதுவரை எந்தத் திட்டமும் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், பின்னர் ஓபிஎஸ் எடப்பாடி உடன் கைகோர்த்தார். டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கினார். 2022ல் ஓபிஎஸ்ஸை வெளியேற்றி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக கட்சியில் மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அன்று அமித்ஷா பேச்சை மட்டும் கேட்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக இன்று ஆளும் கட்சியாக இருந்திருக்கும் என்றும், எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் இணைப்புகள் நடக்கும் என்றும், சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள பாஜக மேலிடம் அழுத்தம் கொடுக்கும் என்றும், செங்கோட்டையனின் நகர்வுகளும் அதன் செயல்பாடுகள் தான் என்றும் அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்னும் 6 மாத காலம் ஓ பன்னீர்செல்வம் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம், அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காக பேசுவோம் என்று கூறி இருந்தார். இது அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேர்ந்தால் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications