நத்தம் விஸ்வநாதனுக்கு 'நோ சீட்' - ஆத்தூரில் திமுகவின் ஐ.பெரியசாமிக்கு எதிராக மாஜி எம்.பி சீனிவாசன்?
சென்னை: அதிமுக ஆட்சியின் சர்ச்சைக்குரிய ஐவரணி அமைச்சர்களில் 2-வது இடத்தில் இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதில்லை என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நத்தம் தொகுதியில் போட்டியிடுவோருக்கான நேர்காணலுக்கு விஸ்வநாதன் அழைக்கப்படாததையடுத்து அவர் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக மட்டும் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் ஜெ.வுக்கு அடுத்ததாக ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 5 அமைச்சர்கள்தான் கோலோச்சி வந்தனர். இதனால் ஐவரணிதான் பவர் புல் டீமாக வலம் வந்தது.
ஐவரணி சர்ச்சை
அண்மையில் தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பல நூறு கோடி வசூல் வேட்டையில் இந்த ஐவரணி இறங்கியதாக புகார்கள் பறந்தன... இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை இந்த ஐவரணியின் வசூல் வேட்டைகளை தோண்ட தோண்ட பூதம் கிளம்பியது. ஐவரணி அமைச்சர்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டதாகவெல்லாம் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகள் வெளியான பின்னர் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் போன்றோரின் கட்சி, அரசு சார்ந்த செயல்பாடுகள் முற்றாக முடங்கிப் போயின. இதனால் இவர்களுக்கு மட்டுமின்றி இவர்களது ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்பட்டு வந்தது.
'நத்தம்' நேர்காணல்
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவின் வேட்பாளர் நேர்காணலில் நத்தம் தொகுதிக்கு அமைச்சர் விஸ்வநாதனைத் தவிர்த்து ஒன்றிய செயலாளர் ஷாஜகான், சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமராஜ், சாணார்பட்டி ஒன்றியத் தலைவர் இன்பஜோதி ஆகியோர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆத்தூரில் சீனிவாசன்
அத்துடன் திண்டுக்கல் தொகுதிக்கான நேர்காணலின் போது முன்னாள் எம்.பி. சீனிவாசனிடம் நீங்கள் ஆத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியை எதிர்த்து போட்டியிடுவீர்களா? என ஜெயலலிதா கேட்டதாவும் அவரும் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ. பெரியசாமிக்கு எதிராக ஒவ்வொருமுறையும் டம்மி வேட்பாளரை போட்டு அவரை ஜெயிக்க வைப்பதே நத்தம் விஸ்வநாதன்தான்; ஐ. பெரியசாமியுடன் கூட்டு சேர்ந்து பல தொழில்களை நத்தம் விஸ்நாதன் செய்து வருகிறார் என்பது அதிமுக மேலிடத்தின் கோபம். ஐ. பெரியசாமியை இம்முறை தோற்கடித்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் அதிமுக தலைமை.
நத்தம் இன்சார்ஜ்
இதனால் இம்முறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய 7 தொகுதிகளுக்கும் நத்தம் விஸ்வநாதனை பொறுப்பாளராக மட்டும் நியமித்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உங்கள் பொறுப்பு; அப்படி அதிமுக வேட்பாளர் ஜெயிக்கவில்லையெனில் கட்சியில் ஓரம்கட்டப்படுவீர்கள் என அதிமுக மேலிடம் கறாராக எச்சரிக்கை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட அதிமுக என்றாலே நத்தம் விஸ்வநாதனும் அவரது மருமகன் கண்ணனும்தான் என்ற ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிம்மதி பெருமூச்சையும் திண்டுக்கல் அதிமுகவினரிடத்தில் காண முடிகிறது.