அதிமுகவா? மநகூவா?: எங்க கூட்டணியை அறிவிக்க இன்னும் காலமிருக்கு... சொல்வது வாசன்
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் இருக்கிறது விரைவில் அறிவிப்போம் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி தமாகாவுக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அதில் தலையிட விரும்பவில்லை என்றும் வாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று படு பரபரப்பாக இயங்கி வருகின்றன.
ஆளும் கட்சியான அதிமுக தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் நேர்காணல் என பிஸியாகி விட்டது. திமுக தரப்போ காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பாஜகவும் ஒரு பக்கம் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த ஜி.கே. வாசனோ கூட்டணி பற்றி அறிவிக்க இன்னமும் காலமிருக்கிறது என்றே கூறிக்கொண்டிருக்கிறார்.
இன்று சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த வாசன், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவரை சந்தித்து கூட்டணி அமைத்துள்ளனர். தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி அமைத்துள்ளது என்பதை அவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் நலக்கூட்டணி தங்களுக்கு ஏதுவான முடிவை அறிவித்துள்ளனர். மேலும் தாங்கள் ஏற்றுக் கொண்ட தலைமையை அறிவித்திருப்பது அவர்கள் உரிமை. அதை அவர்கள் உறுதிபட வெளிப்படுத்தியுள்ளனர். இதில் தமாகாவுக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அதில் தலையிட விரும்பவில்லை.
அதிமுகவுடன் கூட்டணியா என கேட்கிறீர்கள். தமாகா பொறுத்தவரை கூட்டணி பற்றிய இறுதி முடிவை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பேன். அதுவரை எந்தவிதமான யூகங்களுக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை.
தமாகா எந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட போகிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கூட்டணி குறித்து எந்த தகவலாக இருந்தாலும் தமாகா அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கும்.
ஏற்கனவே கூறியது போல தமாகா இறுதி நிலையை இம்மாத இறுதியில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாக புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, உண்மையாக அதுபோன்ற புகார்கள் வந்தால் தமாகா அதை எடுத்து வைக்கும் என ஜி.கே.வாசன் கூறினார்.
அதிமுக அழைப்புக்காக காத்திருப்பா?
சட்டசபைத் தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால் 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுவதாக தெரிகிறது. மற்ற கட்சிகளின் கூட்டணி ஓரளவு முடிவாகி விட்டதால் அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்த ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் வருகிற 25ம்தேதி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவிடம் கேட்ட தொகுதிகள் கிடைக்கா விட்டால் ஒருவேளை தனது பார்வையை மக்கள் நலக்கூட்டணியின் பக்கம் வாசன் திருப்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications