அன்புமணியுடன் ஒரே மேடையில் விவாதிக்கும் திறமை யாருக்கும் இல்லை: ராமதாஸ்
சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியுடன் ஒரே மேடையில் விவாதிக்கும் திறமை யாருக்கும் இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள தாம்பரத்தில் பாமக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் கொள்கை உள்ள ஒரே கட்சி பாமக. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இதுவரை 28 ஆவணங்களை வெளியிட்டு இருக்கிறோம். 15 வரைவு பட்ஜெட்டுகளை வெளியிட்டுள்ளோம். மேலும் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் வெளியிடுகிறோம். பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படுகிறோம்.
ஆண்ட கட்சிக்கும் சரி, ஆளும் கட்சிக்கும் சரி மக்களை பற்றி எல்லாம் கவலை இல்லை. நான் மக்கள் பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னை போராளி, போராட்டக்காரன் என அழைப்பது தான் பிடிக்கும்.
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தன்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தும் இதுவரை எந்த கட்சியும் முன்வரவில்லை. அன்புமணி திறமையானவர். அத்தகையவருடன் விவாதிக்கும் திறமை யாருக்கும் இல்லை.
தமிழகத்தில் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் உள்ளனர். ஆனால் மாநில அரசுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. தினமும் டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பது தான் அதன் கவலை.
கருணாநிதிக்கு 5 முறை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு தலா 3 முறை என அந்த 2 கட்சிகளுக்கும் மாறி மாறி வாய்ப்பளித்தீர்கள். ஒரு முறை அன்புமணிக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். அவர் தமிழகத்தில் பல வளர்ச்சிப்பணிகளை செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications