சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்! மாற்று ஊழியர்களை களம் இறக்கியது அரசு!!
சென்னை: தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் சத்துணவு வழங்கும் பணிகள் முடங்காதவகையில் மாற்றுப் பணியாளர்களை இறக்கி உள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் உள்ள 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நேற்று முன் தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்திய 34 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
இதனிடையே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரசின் சார்பில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் சத்துணவு ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு இன்று முதல் போராட்டங்களை நடத்த உள்ளனர். நாளை மறுநாள் சிறைநிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.
இதனிடையே இந்த வேலை நிறுத்தத்தால் சத்துணவுப் பணிகள் முடங்காத வகையில் மாற்றுப் பணியாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications