வடசென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் அதிரடி மாற்றம்
வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகர் அதிரடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
சென்னை: வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ரூ.100 கோடி வரை பணம் விநியோகம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவிடம் திமுக, பாஜக ஆகியன புகார் அளித்தன.
இந்நிலையில் இந்த தேர்தல் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்கு சாவடிகளை ஆய்வு செய்வது, வாக்கு எண்ணிக்கை பகுதிகளின் பாதுகாப்பு ஆய்வு என தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
பணப்பட்டுவாடா புகார் வந்தாலும் தேர்தல் நடத்தப்படும் என்றும் புகாருக்குள்ளான காவல் துறை அதிகாரிகள் இடம் மாற்றப்படுவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி, வட சென்னை காவல் துறை இணை ஆணையராக இருந்த சுதாகரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்தது.