ஜில்லென்று தொடங்கியது வடகிழக்கு பருவமழை - இடியோடு வெளுத்து கட்டுமாம்!
தமிழகம்,புதுச்சேரியில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை:தமிழகத்தில் அக்.26ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் தாம்பரம், பல்லாவரம், கே.கே நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் மிதமான மழை பெய்தது. காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் நேற்று கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது, தமிழகம், புதுச்சேரியில் இன்று வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கை சென்னைவாசிகள் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அதற்கு நேர்மாறாக கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை கடந்த ஆண்டு பொய்த்துப்போனது.
இயல்பைவிட 62 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால் கடும் வறட்சி நிலவியது.
மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் இருந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. கல்குவாரி தண்ணீரை குடிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் சுமாராக தொடங்கினாலும் பல பகுதிகளில் பரவலாக பெய்துள்ளது. இதனிடையே வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்டோபர் இறுதியில் தொடங்கியுள்ள பருவமழை டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம், புதுவை, கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.