வடகிழக்குப் பருவமழை இன்று மாலை முதல் தொடங்குகிறது – கனமழை எச்சரிக்கை
சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று மாலை முதல் மழை பெய்யும் என்றும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.
சென்னையில், நாளை ஒரே நாளில், 30 செ.மீ., மழை பெய்யும்; முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி பெயரில், 'வாட்ஸ் ஆப்'பில், உலா வந்த தகவல் சென்னைவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
நடப்பாண்டில், தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. தற்போது பருவமழைக்கான அறிகுறிகள் வலுவடைந்துள்ளன. 'வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று மாலை முதல், 30ம் தேதி வரை கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்குப் பருவமழை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன், நான் ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களிலும் அநேக இடங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை புதன்கிழமை தொடங்க உள்ளது. இப்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்றார் ரமணன்.

தமிழகம், புதுச்சேரியில் மழை
வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 4.5 கி.மீ., உயரத்தில், புயல் சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இது வலுவடைந்தால், நாளை முதல், 30ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும், தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்று வீச வாய்ப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அந்தமான், லட்சத்தீவு பகுதியில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அப்போது பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள கடல் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச்செல்லவேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் எச்சரிக்கை
சென்னையில், நாளை ஒரே நாளில், 30 செ.மீ., மழை பெய்யும்; முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி பெயரில், 'வாட்ஸ் ஆப்'பில், நேற்று உலா வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து கூறிய ரமணன், 'இலங்கை அருகே, வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புதன்கிழமை, தமிழகம் அருகே வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உண்டு. இதேபோல், மதுரை, திருச்சி பகுதிகளிலும் மழை பெய்யலாம். கன மழை பெய்யும்; எனினும், 30 செ.மீ., மழை, ஒரே நாளில் பெய்ய வாய்ப்பில்லை என்று ரமணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications