துணை முதல்வர் பதவி கேட்கும் நமச்சிவாயம்... சபாநாயகராக மறுக்கும் வைத்திலிங்கம்!
புதுச்சேரி: புற்று இருக்கும் இடத்தில் பாம்பும் இருக்கும் என்பார்கள். அதேபோல காங்கிரஸ் இருக்கும் இடத்தில் கலகமும் இருக்கும். புதுச்சேரி அரசியல் நிலவரமும் அப்படித்தான் கலவரமாக இருக்கிறது. முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்த மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தற்போது துணை முதல்வர் பதவியை கேட்கிறாராம்.
இதுவரை புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி இருந்ததில்லை. மேலும் இது குட்டியூண்டு யூனியன் பிரதேசமும் கூட. இங்கு மிக மிக சிறிய அமைச்சரவைதான் எப்போதுமே பதவி ஏற்கும். அதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை. இந்த நிலையில் துணை முதல்வர் பதவிக்கு சட்டத்தில் இடமுண்டா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக தற்போது காங்கிரஸ் மேலிடம் ஆராய்ந்து வருகிறதாம்.

புதுச்சேரியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணமே நமச்சிவாயம்தான். இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் கடந்த தேர்தலில் ரங்கசாமிக்கு ஆதரவாக இருந்ததால்தான் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
இதனால்தான் வன்னியர் வாக்கு வங்கியை தம் பக்கம் திருப்பும் முகமாக நமச்சிவாயத்தை காங்கிரஸ் தலைவராக்கினர். அவரும் பல முக்கிய பிரமுகர்களை கட்சிக்குள் கொண்டு வந்தார். தீவிரமாக பிரச்சாரம் செய்தார். சமுதாயத்தின் ஆதரவையும் முழுமையாக திரட்டினார். விளைவு, காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது.
ஆனால் ஜெயித்து முடித்ததும் நமச்சிவாயத்தை ஓரம் கட்டி விட்டது காங்கிரஸ். நாராயணசாமி தனது டெல்லி லாபி மூலம் முதல்வர் பதவியைக் கைப்பற்றி விட்டார். நமச்சிவாயம் அதிர்ச்சி அடைந்து விட்டார். இருப்பினும் அவரை கட்சி மேலிடம் சமாதானப்படுத்தியுள்ளது.
தற்போதைக்கு அவர் அமைதியாக இருக்கிறார் என்றாலும் கூட தனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றும், தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி தர வேண்டும் என்றும் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
வைத்திலிங்கம் திடீர் முரண்டு
இதற்கிடையே நாராயணசாமி அமைச்சரவையில் முதல் கட்டமாக 3 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. நிதி, உள்துறை உள்ளிட்டவற்றை நாராயணசாமி தன் வசமே வைத்துக் கொள்வார். அது போக நமச்சிவாயத்திற்கு சுகாதாரம், உள்ளாட்சித் துறையும், கமலக்கண்ணனுக்கு பொதுப்பணித்துறையும், ஜான் குமாருக்கு சுற்றுலாத் துறையும் தரப்படலாம் என்று தெரிகிறது.
முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் சபாநாயகராக நிறுத்தப்படக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் விரும்பவில்லை என்று சொல்லப்படுவதால் அது ஒரு பூசலாக வெடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications