உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை... நேற்று அமைதி காத்த ராமதாஸ் இன்று கண்டனம்
கிருஷ்ணகிரி: உடுமலைப்பேட்டையில் ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித் இலைஞர் சங்கர் படுகொலை குறித்து நேற்று கருத்துக் கூற மறுத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அவரும் பதிலளித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் நேற்றைய தினம் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடியை பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. தமிழகத்தில் இதுமாதிரியான கவுரவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
கேள்வியை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ராமதாஸ் கேள்வி கேட்டு முடித்தவுடன் சட்டென எழுந்தார். "எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்...இப்ப போனதெல்லாம்... சொன்னதெல்லாம் சொல்லுங்க... போடுங்க. அப்புறம்..அதப் பத்தி பேசலாம்" என்று கூறி விட்டு கிளம்பிப் போய் விட்டார்.
தலித் இளைஞரின் படுகொலை குறித்து ராமதாஸ் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இதை விட முக்கியமான விஷயம் என்று அவர் கூறியது மேலும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.
இந்த நிலையில் ராமதாஸின் மகனும், பாமகவின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் இந்தக் கொலைக்குக் கண்டனம் தெரிவித்துக் கருத்து தெரிவித்தார். தற்போது ராமதாஸும் திடீரென இந்தக் கொலை குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது இந்த விவகாரம் குறித்துக் கேட்டனர். அதற்கு ராமதாஸ், உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை கண்டனத்துக்குரியதே. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இது ஒரு உதாரணம். பாமக எப்போதுமே காதல் திருமணங்களுக்கு எதிரி அல்ல. காதல் நாடகத் திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.