கல்லாக நின்னாயோ! "மனோஜ் போய்ட்டான்டா"..சீமானின் நெஞ்சில் கைவைத்து கதறி அழுத 'அப்பா' பாரதிராஜா!
சென்னை: நடிகர் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அவரால் அப்பா... அப்பா என அழைக்கப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, கண்ணீர்விட்டு கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் கனக்க வைத்தது.
சீமானின் பேச்சுகளில் அப்பா என இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோரை குறிப்பிடுவது உண்டு. பாரதிராஜாவும் 'மகனே' என்றுதான் சீமானை அழைப்பர்.

இந்த நிலையில் இயக்குநர் இமயத்தின் ஒரே மகன் மனோஜ் (வயது 48), உடல்நலக் குறைவால் காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. திரைத்துறையினர் மட்டுமல்லாது.. பாரதிராஜா மீது நேசம் கொண்ட அனைவரது நெஞ்சங்களையும் உலுக்கி எடுத்திருக்கிறது மனோஜ் மறைவு.
சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு மனோஜ் உடல் கொண்டு செல்லப்பட்டது. மனோஜ் உடலுக்கு பல்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் இரவு முதல் விடிய விடிய கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவை அப்பா, அப்பா என எப்போதும் பேரன்புடன் அழைக்கிற சீமானை பார்த்ததும் பாரதிராஜா கண்ணீர்விட்டு கதறினார். சீமானின் கைகளைப் பிடித்தபடி, மனோஜ் போய்விட்டான்டா என புலம்பியபடியே பாரதிராஜா கண்ணீருடன் கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் கனக்க வைத்தது. தனது தந்தை நிலையில் வைத்து போற்றுகிற பாரதிராஜாவின் இந்த கதறலால் சீமானும் நிலைகுலைந்து போயிருந்தார். சீமானும் கண்ணீரை அடக்க முடியாத பெருந்துயரில் பாரதிராஜாவின் கைகளை இறுகக் கைப்பற்றியபடியே நின்றிருந்தார்.












Click it and Unblock the Notifications