புதிய கட்சி இல்லை- அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தந்தால் மட்டுமே முதல்வர்: ஓபிஎஸ் திட்டவட்டம்
தனிக்கட்சி தொடங்கமாட்டேன் என்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வராவேன் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனிக் கட்சியை தாம் தொடங்கப் போவதில்லை என்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தந்தால் மட்டுமே பதவியில் தொடருவேன் எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு நான் காரணம் அல்ல. இந்த நிலைமைக்கு யார் காரணம் என மக்கள் அறிவார்கள்.

அதிகாரம் இல்லை
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலராக இருப்பவர் பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்க முடியாது என்கிறது கட்சி. நான் தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை.

பிற கட்சி ஆதரவு இல்லை
விரைவில் மக்களை நேரில் சந்திக்க உள்ளேன். சட்டசபையில் என்னுடைய பலம் நாட்டு மக்களுக்குத் தெரியும். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தந்தால் மட்டுமே முதல்வர் பதவியில் நீடிப்பேன். பிற கட்சிகளின் ஆதரவை நான் கேட்கமாட்டேன்; எதிர்பார்க்கவில்லை. அதிமுக எம்.எல்.ஏக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

சசிக்கு எதிர்ப்பு
நான் கட்டாயப்படுத்தப்பட்டதால் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட நேரிட்டது. சசிகலா முதல்வராவதற்கு அதிமுகவின் கீழ்மட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டது.

அவமானம்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்னை எதிர்வரிசையில் அமர வைத்தனர். ஜெயலலிதா இருந்தகால கட்டத்தில்கூட நான் அப்படி அவமானப்படுத்தப்பட்டது இல்லை. முதல்வர் என்ற பதவிக்கு மரியாதை இருக்கிறது. அதற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் சசிகலா தரப்பினர் செயல்பட்டனர்.

திமுக, பாஜக இல்லை
ஜெயலலிதா எந்த வேலையை செய்ய சொல்லி பணித்தாரே அதன்படிதான் நான் செயல்படுகிறேன். ஜெயலலிதா மறைந்த பிறகு என்னையே முதல்வராக பதவியேற்க வேண்டும் என அனைவரும் கூறினர். எனக்குப் பின்னால் திமுக இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. எனக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக சசிகலா இருந்தாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications