டிடிவி தினகரன் விட்டுட்டு போன மாதிரியே.. பண்ணை வீட்டில் உருக்கமாக பேசிய ஓபிஎஸ்.. ஓஹோ.. இதான் பிளானா?
தேனி : தேனியில் இன்று தனது பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பற்றியும் சில விஷயங்களைப் பேசியுள்ளார். இதன் மூலம் திருச்சி மாநாட்டுக்கு டிடிவி தினகரனின் சப்போர்ட்டை பெற ஓபிஎஸ் முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீதிமன்றங்களில் அடுத்தடுத்து ஈபிஎஸ்ஸூக்கு சாதகமான தீர்ப்புகள் வந்ததால், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன்படி, வரும் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளில் ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் திருச்சியில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ் பரபர ஆலோசனை : திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் மாநாடு தொடர்பாக முக்கிய நிர்வாகிகள், தேனி மாவட்ட அதிமுகவினருடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் திருச்சியில் நடைபெறவுள்ள முப்பெரும் விழா மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாட்டை பிரமாண்டமான முறையில் குறித்து பல முக்கிய விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

ஏமாற்றினார் எடப்பாடி : இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "வரும் 24ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை அவரவர் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் அழைத்து வர வேண்டும். இந்த திருச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
முதல்வர் பதவியைப் பெற்ற பின், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தனி நபர் கையில் சிக்கிவிடக்கூடாது. ஜனநாயக முறைப்படி கட்சி நடைபெற வேண்டும். தனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் கட்சி நிலைத்து நிற்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்." என்றார்.
தினகரன் பற்றி ஓபிஎஸ் : மேலும் பேசிய ஓபிஎஸ், "தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காக பல கட்சிகள் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்கின்றன. ஆனால் முன்னாள் எம்.பி டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தை முழுமையாக நிர்வகிக்கும்போது யாரிடமும் கையேந்தி நிற்கவில்லை. எப்படி அவர் தேனி மாவட்டத்தை என்னிடம் விட்டுச் சென்றாரோ அதை தற்போது வரை பின்பற்றுகிறேன். எந்த தொழிலதிபரிடமும் கட்சி நிதிக்காக கையேந்தவில்லை" எனத் தெரிவித்தார்.

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா, ஓபிஎஸ், கேசி பழனிசாமி, அன்வர் ராஜா உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று தேனியில் பேசும்போது டிடிவி தினகரன் பற்றி நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் ஓபிஎஸ். திருச்சி மாநாட்டுக்கு தினகரனின் சப்போர்ட் கோரும் வகையிலேயே ஓபிஎஸ் இவ்வாறு பேசியிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஓபிஎஸ் - டிடிவி தினகரன் மீட்டிங் : அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் சூடுபிடித்த காலகட்டம் தொடங்கி, ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை சந்திக்கப்போவதாக அவ்வப்போது தகவல்கள் அடிபட்டு வருகின்றன. ஓபிஎஸ்ஸும் சரி, தினகரனும் சரி, அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் சந்திப்போம் என்றே கூறி வருகின்றனர்.
தற்போது கிட்டத்தட்ட கட்சி ஓபிஎஸ் கையை விட்டுச் சென்றிருக்கும் நிலையில், தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களின் ஒற்றுமை என்ற அடிப்படையில் சசிகலா, தினகரன் ஆகியோரின் ஆதரவைக் கோருவார் எனக் கூறப்படுகிறது. திருச்சி மாநாட்டில் பெரும் கூட்டத்தை திரட்டுவதற்காக ஓபிஎஸ் தினகரனிடம் போனில் பேசக்கூடும் என்றும் ஓபிஎஸ் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.












Click it and Unblock the Notifications