ஸ்டாலின் திடீரென வயலில் நடப்பார்.. சைக்கிளில் போவார்.. டீ குடிப்பார்: ஓபிஎஸ் தாக்கு
நாகர்கோவில் மாநாட்டில் ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் தாக்கி பேசினார்.
Recommended Video
கன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென கலர் சட்டை போடுவார், திடீரென வயலில் நடப்பார், சைக்கிளில் போவார், டீ கடையில் டீ குடிப்பார் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
நாகர்கோவிலில் நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நகைச்சுவை தாக்கு
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினார்கள். இதில் ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவையாக பேசி ஸ்டாலினை தாக்கி உள்ளார்.
பொய் பேச டாக்டர் பட்டம்
முதலமைச்சர் பேசும்போது, "எதிர்கட்சித்தலைவர் பேசுவது அத்தனையும் பொய். பொய் பேச டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்குப் பொருந்தும்." என்று கூறினார்.
தூங்க போவதில்லை
பின்னர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: "தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இந்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. ஏனெனில் இது குடும்ப ஆட்சி கிடையாது, ஜனநாயக முறைப்படி செயல்படும் ஆட்சி. இந்த ஆட்சி கலையும் வரை தான் தூங்க போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார்.
டீ குடிப்பார் ஸ்டாலின்
அப்படி பார்த்தால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்கவே முடியாது. ஸ்டாலின் திடீர் திடீரென கலர் கலராக சட்டை போடுவார், திடீர் திடீரென வயலில் நடப்பார், சைக்கிளில் போவார், டீ கடையில் டீ குடிப்பார். ஆனால் நாங்கள் டீ கடையே நடத்தியிருக்கிறோம். ஆர்கே நகரில் டெபாசிட் இழந்ததை ஸ்டாலின் மறந்துவிட்டார் போலும்" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.