காவு கொண்ட கட்டிட இடிபாடு: சென்னையில் ஒடிஷா அமைச்சர் முகாம்!
சென்னை: நாட்டை உலுக்கிய சென்னை மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஒடிஷா மாநிலத்தவர் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரபுல்லா மாலிக் தலைமையிலான குழு சென்னையில் முகாமிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் ஒடிஷா மாநில தொழிலாளர்களும் அடங்குவர்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கெனவே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சென்றார். இந்த நிலையில் ஒடிஷா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரபுல் மாலிக், தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் ஷாலினி பண்டிட் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.
மவுலிவாக்கம் கட்டிட இடிபாடு பகுதியைப் பார்வையிடும் இக்குழுவினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஒடிஷா மாநிலத்தவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். பின்னர் தமிழக அரசு அதிகாரிகளுடனும் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, ஒடிஷா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications