சென்னையை கைவிட்ட ஓலாவும், ஊபரும்.. ஆயிரக்கணக்கில் பணம் கேட்கும் அவலம்.. மக்கள் பாடு திண்டாட்டம்
Recommended Video

சென்னை: மழை காலங்களில் ஊபர், ஓலா போன்ற கால் டாக்சி நிறுவனங்கள் சென்னைவாசிகளை கைவிட்டுவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சில கிலோ மீட்டர் தூரத்திற்கு பல ஆயிரங்களை டாக்சி டிரைவர்கள் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியுள்ளனர்.
என்னதான் தனியார் டாக்சிகள் நமது வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகளில் ஓடி லாபம் சம்பாதித்தாலும், பெருமழை காலங்களில் அவர்கள் வசதியை பார்த்துக்கொண்டு மக்களை கைவிடுவதுதான் தொடர் கதையாக நடக்கிறது.
சென்னையோ, பெங்களூரோ, மும்பையோ, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுதான் நிதர்சனமாக உள்ளது. இப்போது இதன் சூட்டை சென்னைவாசிகள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து வருகிறார்கள்.

கால் டாக்சிகள் கைவிரிப்பு
சென்னையில் திடீரென இரவில் மழை பெய்வதால் உடனே வீடுகளுக்கு திரும்ப மக்கள் ஆட்டோக்களையோ, கால்டாக்சிகளையோதான் நம்புகிறார்கள். ஆனால் பெரிதாக தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் கால் டாக்சி நிறுவனங்களோ அப்போதுதான் காலை வாருகின்றன. சென்னையில் ஓலா, ஊபர், மேரு, என்டிஎல் போன்ற கால்டாக்சிகள் பிரபலமாக உள்ளன. ஆனால், இவற்றில் எதுவுமே தேவைப்படும் மழைக்காலத்தில் கை கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

விமான டிக்கெட்டை விட அதிகம்
ஷிப்பிங் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ கேப்டன் கே.ராமகிருஷ்ணன் என்பவர் இதுகுறித்து கூறுகையில், மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தேன். ஆனால் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிலிருந்து கலாஷேத்ரா சாலைக்கு (சுமார் 10 கி.மீ தூரம்) செல்ல டாக்சி டிரைவர், விமான டிக்கெட் கட்டணத்தைவிட அதிகமாக கேட்டார்கள். ஒரு டாக்சி டிரைவர் ரூ.3000 கட்டணமாக கேட்டார். எனக்கு வேறு வழியில்லாமல் பயணித்தேன் என்றார்.

ஏர்போர்ட் சர்வீஸ் க்ளோஸ்
மழையால் நேற்றிரவு ஏர்போர்ட்டிலுள்ள டாக்சி சர்வீஸ் அனைத்துமே நிறுத்தப்பட்டிருந்ததாம். கால் டாக்சி டிரைவர்கள் யாருமே வர மறுத்ததால், தனியார் டாக்சியில் இவ்வளவு கட்டணம் கொடுத்து பயணித்துள்ளார் அவர். அதேபோன்ற நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

டிரைவர்கள் கஷ்டம் இது
இதுகுறித்து ஓலா டிரைவர் ஒருவர் கூறுகையில், பெரும்பாலானோர் சொந்த வாகனங்களையே பயன்படுத்துகிறோம். மழை வெள்ளம் கார் இன்ஜினுக்குள் சென்றால் எங்களுக்கு அதிகபட்சம் ரூ.8000 வரை செலவாகும். ஓலா வாகன இன்சூரன்சுக்கு பணம் தருவதில்லை. நாங்கள்தான் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டியுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள், சேத மதிப்பில் 70 முதல் 80 சதவீத தொகையைத்தான் தருவார்கள். எனவேதான் நாங்கள் ரிஸ்க் எடுப்பதில்லை என்கிறார்.

கூடுதல் பஸ்கள் தேவை
பயணிகளின் குமுறல்கள் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தாலும், இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் பார்த்துக்கொள்கிறோம் என்று ஓலா நிறுவனம் கூறியுள்ளதாம். ஆனால் நடைமுறைக்கு இது சாத்தியப்படுமா? எனவே அரசு இரவு நேரத்தில் பேருந்துகள் எண்ணிக்கையை குறைக்காமல் இருப்பது பலன் தரும் என்கிறார்கள் சென்னைவாசிகள்.












Click it and Unblock the Notifications