பொறுப்பே இல்லாத பாபு.. செல்பி மோகத்தில் முதலில் மகன்.. இப்போது பெற்றோரையும் இழந்தார்.. கரூர் சோகம்!
கரூரில் மகனின் பொறுப்பற்ற தனத்தால் பேரக்குழந்தையை இழந்த பெற்றோர் தற்போது தங்களின் உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளனர்.
Recommended Video
கரூர்: மகனின் பொறுப்பற்ற தனத்தால் பேரக்குழந்தையை இழந்த பெற்றோர் தற்போது தங்களின் உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளனர்.
கரூர் எல்பிஜி நகரை சேர்ந்தவர் 60 வயதான கஸ்தூரி. இவரது மனைவி கவுசல்யா. இந்த தம்பதியின் மகன் பாபு.
பாபுவுக்கு திருமணமாகி ஒரு மனைவியும் 4 வயதில் தன்வந்த் என்ற ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தன்வந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மகனை அழைத்து சென்ற பாபு
இதையடுத்து நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள காவிரியாற்றின வாங்கல் பாலத்திற்கு மகனை அழைத்து சென்றார் பாபு. அப்போது கர்நாடக மாநிலத்தில் கொட்டிய மழையால் தமிழகத்திற்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டு தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
காவிரியில் செல்பி
இதனால் காவிரியாற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. அப்போது தனது 4 வயது மகனை ஆற்றின் பாலத்தில் வைத்து செல்பி எடுத்தார் பாபு.
ஆற்றில் விழுந்த சிறுவன்
செல்பியில் கவனம் செலுத்திய அவர் மகனை ஆற்றில் தவறவிட்டார். பாலத்தில் இருந்து ஆற்றின் நடுப்பகுதியில் விழுந்து மாயமானான் சிறுவன். இதுவரை சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.
மோசடி
இந்நிலையில் பாபு பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். ஆனால் அனைத்திலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனாளியானார். இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் பணம் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்துள்ளார்.
பெற்றோருக்கு நெருக்கடி
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். கடன்காரர்களிடம் இருந்து பாபு எஸ்கேப்பாக, வீட்டில் இருந்த அவரது பெற்றோர் கடன்காரர்களுக்கு பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தீயில் கருகி பலி
இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பெற்றோர் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர். இதில் கணவன் மனைவி இரண்டு பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பொறுப்பிலாத பாபு
தனது பொறுப்பற்றத்தனத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 4 வயது குழந்தையை இழந்தார். இன்று தனது பெற்றோரை தீக்கிரையாக்கி நிற்கிறார் பாபு. பாபுவின் பொறுப்பில்லாதனத்தால் அடுத்தடுத்து அரங்கேறும் இழப்புகள் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.