ஒணம் வந்தல்லோ… அத்தப்பூ கோலம் அமர்க்களம்: தோவாளையில் பூ விற்பனை படுஜோர்
கன்னியாகுமரி: கேரளா மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை திருநாளை வரவேற்கும் வகையில் அத்தப்பூ கோலம் இடும் நிகழ்வு இன்று தொடங்கியுள்ளதால் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. 30 ஆயிரம் கிலோ பூக்களை கேரள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓணம் பண்டிகை 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆவணி மாதத்தில் ஹஸ்தம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களும் கேரளா மாநிலத்தில் ஓணத்தை வரவேற்கும் வகையில் வீடுகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் இட்டு அலங்கரிப்பர்.

பல மாநில மலர்கள்
அத்தப்பூ கோலமிடுவதற்குத் தேவையான பல வண்ண மலர்கள் மைசூர், ஓசூர், பெங்களூரு, ஊட்டி, மதுரை, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், சேலம், தோவாளை போன்ற பகுதிகளில் இருந்து கேரளா செல்கின்றன.

மலர்சந்தையில் வியாபாரம்
ஓணம் பண்டிகை இன்றுமுதல் தொடங்கியுள்ளதால் தோவாளை மலர்சந்தையில் பூக்கள் வியாபாரம் களைகட்டியுள்ளது. அத்தப்பூ கோலத்துக்கான பூக்களை வாங்க கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் பொதுமக்களும் தோவாளையில் குவிந்தனர். கேரளாவுக்கு மட்டும் 30 ஆயிரம் கிலோ பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

மலர்கள் விலை நிலவரம்
மல்லிகை கிலோ ரூ. 250, பிச்சி 400, முல்லை 300க்கு விற்பனையானது. அதேநேரம் சம்பங்கி, செவ்வந்தி பூக்கள் கிலோ ரூ. 200, தெற்றி பூ 120, அரளி 100, ஓசூர் ரோஜா 150, வாடாமல்லி 100, மரிக்கொழுந்து 120, கோழிக்கொண்டை ரூ. 70-க்கு விற்பனை ஆனது. இது திங்கட்கிழமை விலையைவிட இரட்டிப்பாகும்.

ஓணம் பண்டிகை
28ம் தேதி ஓணம் வரை 5 லட்சம் கிலோவுக்கு மேல் பூக்கள் தேவைப்படுகிறது. இதற்காக இப்போதே கேரள வியாபாரிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். அதே நேரம் பூக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications