நீலகிரியில் மரம் விழுந்து இரண்டாக பிளந்த பேருந்து - ஒருவர் பரிதாப பலி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பஸ் இரண்டாக பிளந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை துவங்கி கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், பி.மணியட்டி கிராமத்தில் இருந்து ஊட்டி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.

நுந்தளாமட்டம், தாம்பட்டி பிரிவு இடையே வந்த போது சாலையோரத்தில் இருந்த ராட்சத கற்பூர மரம் பஸ்சின் மீது சாய்ந்து விழுந்தது. இதில் பஸ் இரண்டாக பிளந்தது. இதில் காத்தாடிமட்டம் பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்று பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குல்சான் குமார் மரத்தின் அடியில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சில் இருந்த 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பெரும்பாலான மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் பரவலாக பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரம் இருளில் மூழ்கியது.
நகருக்கு வரும் உயரழுத்த மின் பாதையில் மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக அவலாஞ்சி மற்றும் சாண்டிநல்லா துணை மின் நிலையங்கள் பாதிப்படைந்தது. நேற்று இரவு வரை ஊட்டிக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் ஊட்டி நகரம் 2 வது நாளாக இருளில் மூழ்கிக் கிடந்தது. தொடர்ந்து மழை பெய்வதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சங்கர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications