தவறு செய்தவர்கள்தான் பாதுகாப்பு கேட்பார்கள்- எனக்கு தொண்டர்களே பாதுகாப்பு: மு.க. அழகிரி
மதுரை: தவறு செய்தவர்கள்தான் தங்களுக்கு பாதுகாப்பு கேட்பார்கள்.. எனக்கு தொண்டர்களே பாதுகாப்பு என்று மு.க. அழகிரி விமர்சித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் மு.க. ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் மு.க. அழகிரி கூறியதாவது:
என்னுடன் சமரச பேச்சு எதுவும் நடைபெறவில்லை. எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சமரசம் நடைபெற்றால் ஏன் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள்?
அடுத்த கட்ட முடிவு தொடர்பாக தொண்டர்களிடம் இன்னும் பேசவில்லை. அவர்களிடம் கருத்து கேட்கவில்லை. அதற்குள் கருணாநிதி அதிர்ச்சி செய்தி வெளியிட்டுவிட்டார். இன்னமும் அதில் இருந்து நான் மீளவில்லை.
திமுகவின் உட்கட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்கள் வெளியிடுவதாக எதுவும் நான் கூறவில்லை. என் உருவபொம்மையை எரித்தது ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருந்தால் என் பிறந்த நாளை கொண்டாடியதாக எடுத்துக் கொள்கிறேன்.
தி.மு.க.,வில் நடப்பது நாடகம். தே.மு.தி.க.,வை கட்சிக்குள் இழுக்கப் பார்க்கின்றனர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியது குறித்து நான் பதில் கூற விரும்பவில்லை.
ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கேட்டு மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தவறு செய்தவர்கள்தான் பாதுகாப்பு கேட்க வேண்டும் . இது குறித்து மாநில அரசிடம் அவர் கேட்டிருக்க வேண்டும். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இருப்பதால் மத்திய அரசிடம் கேட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் தொண்டர்களே எனக்கு பாதுகாப்பு.
இவ்வாறு அழகிரி கூறினார்.












Click it and Unblock the Notifications