ஊட்டி மலர் கண்காட்சி நெருங்குது.. 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஊட்டி: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டிக்கு செல்கிறார்... வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார். முதல்வரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோடைக்காலம் துவங்கியிருக்கிறது.. மலைகளின் அரசியான ஊட்டியில் தற்போது, இதமான காலநிலை நிலவி கொண்டிருக்கிறது.. இதனை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு திரண்டு வருகின்றனர்.

கோடை கால விழா கொண்டாட்டம்
இதற்காகவே வருடா வருடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை கால விழா என்பது நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.. தோட்டக்கலைத்துறை சார்பில், மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த வருடமும் ஆண்டு கோடை விழா கடந்த 3-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. பிறகு கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. பிறகு ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஊட்டி மலர் கண்காட்சி
இதையடுத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டிக்கு செல்கிறார்.
சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். பிறகு அரசு தரப்பில் நடைபெறவுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
பட்டா - பழங்குடி மக்கள்
இதுமட்டுமின்றி, தொட்ட பெட்டாவில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள மலர் கண்காட்சியை முதல்வர் வரும் 15ம் தேதி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு 16ம் தேதி அல்லது 17ம் தேதி மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.












Click it and Unblock the Notifications