ராகுல் தலைமையில் காங். ஆட்சி அமையும்... நம்பிக்கையை சற்றும் தளர விடாத ‘நாசா’
கும்பகோணம்: மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும், தேர்தல் கருத்துகணிப்புகள் மீண்டும் பொய்யாகும் என தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.
தனது உறவினர்களுடன் கும்பகோணம் வந்துள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி, அங்குள்ள சக்கரபாணிசாமி கோவிலில் சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கோவிலுக்கு வெளியே செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் நாராயணசாமி. அப்போது அவர் கூறியதாவது :-
எனது தனிப்பட்ட வழிபாடு...
நான் வழக்கமாக திருப்பதி கோவில் மற்றும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அது போல் இங்கு சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு வந்து வழிபடுகிறேன். இது எனது தனிப்பட்ட வழிபாடு.
3 வது முறை...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3-வது முறையாக ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
பொய்த்துப் போன கருத்துக்கணிப்புகள்...
காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டுள்ளது. கருத்து கணிப்பு 2 முறை ஏற்கனவே பொய்யாகி விட்டது. கடந்த 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமையும் என்றனர். அதே போலஇந்தியாவின் இரும்பு மனிதர் அத்வானி தலைமையில் 2009-ல் ஆட்சி அமையும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த கணிப்பு பொய்யானது.
நிச்சயம் ஆதரவு கிடைக்காது...
ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நரேந்திர மோடி முறைத்துக்கொண்டுள்ளார். அதனால் மோடி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கமாட்டார்கள்.
ராகுல் தலைமையில்...
மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். 10 ஆண்டு காலம் நிலையான ஆட்சியை அளித்த காங்கிரஸ் தலைமையிலான அரசே மீண்டும் ஆட்சியை அமைக்கும். தேர்தல் கருத்து கணிப்பு 3-வது முறையாக பொய்யாகும். ராகுல்காந்தி தலைமையில் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.