ஓபிஎஸ் உட்பட 12 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் வழக்கு... சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களும் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்ததால் அவர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களும் முதல்வருக்கு எதிராக வாக்களித்ததால் அவர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் வரும் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் 11 எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் தனித்து செயல்பட்டு வந்தார். மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவுபடி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் கடந்த பிப்ரவரி 18-ஆம்தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அப்போது அவருக்கு எதிராக ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்த நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே முதல்வர் மீது நம்பிக்கை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த 18 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துஉத்தரவிட்டார். இந்நிலையில் திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 25-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். அதில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்கள் மீது 6 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று சக்கரபாணி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ரவிச்சந்திரபாபு, திமுக வழக்கு குறித்து சபாநாயகர் வரும் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.