முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆளுநர் இன்றும் அழைப்பு? பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுகிறார்?
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தமது பலத்தை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பளிப்பார் என கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று மீண்டும் அழைத்து ஆலோசனை நடத்தக் கூடும் என கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபையில் தம்முடைய பெரும்பான்மையை நிரூபிக்கவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் உத்தரவிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசகர் ராவை நேற்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தாம் மிரட்டப்பட்டதால் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டதாக விவரித்திருந்தார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் முதல்வர் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா, தமக்கு 134 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து டெல்லிக்கு தமிழக நிலவரம் குறித்து ஒரு அறிக்கையை ஆளுநர் வித்யாசகர் ராவ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் வாய்ப்பு தருவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications