தொப்பி சின்னத்தை கோலமாக போட முயன்ற 'சசிகலா'... மண்டையை உடைத்த கர்ணன்!!
ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர்களை வரவேற்க தொப்பி சின்னத்தை கோலமாக போட முயன்ற முன்னாள் கவுன்சிலரை ஓபிஎஸ் ஆதரவாளர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர்களை வரவேற்க தொப்பி சின்னத்தை கோலமாக போட முயன்ற முன்னாள் கவுன்சிலரை ஓபிஎஸ் ஆதரவாளர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆர்கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்கே.நகர் தொகுதி முழுவதும் ஆட்டம் பாட்டம் என களைகட்டியுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரத்தால் ஆர்கேநகர் பகுதி படு பிஸியாக காணப்படுகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே பெரும்பாலான அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றர்
தொப்பி கோலம்...
இந்நிலையில் நேற்று பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர்களை வரவேற்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சசிகலா என்பவர் தெருவில் தொப்பி சின்னத்தை கோலமாக போட முயன்றார். இதற்கு அதே தெருவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கே.பி.கர்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.
மண்டை உடைப்பு
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சசிகலாவை கர்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த சசிகலாவுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கர்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குத்துவிளக்கு விநியோகம்
இதனிடையே ஆர்கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதியில் வாக்காளர்களுக்கு குத்து விளக்கு வினியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர்.
கையும் களவுமாக பிடித்த பறக்கும்படை
அப்போது சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட பெண், கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 4-வது தெருவைச் சேர்ந்த நளினி என்பதும், அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்த இவர் வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு குத்து விளக்குகள் வினியோகம் செய்ததும் தெரியவந்தது.
போலீசிடம் ஒப்படைப்பு
இதனையடுத்து அவரை பறக்கும்படை அதிகாரிகள் பிடித்து கொருக்குப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நளினியை கைது செய்தனர்.