சேர விரும்பாமல்தான் சுற்றுப்பயணம் போகிறார் ஓபிஎஸ்.. இதுகூட புரியலையா.. தளவாய் சுந்தரம் பாய்ச்சல்
முதல்வர் பழனிசாமியின் அணியுடன் இணையும் விருப்பம் இல்லாமல்தான் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார் ஓபிஎஸ் என்று தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்: ஓபிஎஸ் அணியியும் பழனிசாமி அணியும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது.
ஓபிஎஸ் மற்றும் பழனிசாமி இணைய வேண்டுமானால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன.
ஆனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. ஒரு அணியினர் மற்றொரு அணியினருக்கு பதில் சொல்வதும் கிண்டல் அடிப்பதும் என அரசியல் நாடகம் அரங்கேறி வருகிறது.
சிறப்பான ஆட்சி
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற மே தின விழாவில் அதிமுக அம்மா கட்சியின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசியதாவது:முதல்வர் பழனிசாமி அரசியலில் அனுபவம் மிக்கவர். அவரது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி சிறப்புற நடைபெற்று வருகிறது.
துரோகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே அதிமுகவிற்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். இப்போதும் அதே வேலையை செய்து வருகிறார். இன்றைய சூழ்நிலையில் செயல்படுத்த முடியாத நிபந்தனையை ஓபிஎஸ் கூறி வருகிறார்.
சுற்றுப் பயணம்
ஓபிஎஸ் அணியின் நிலையற்ற பேச்சால் அதிமுக இணைய வாய்ப்பே இல்லை. ஒன்றாக இணைவதை விரும்பாமல் தான் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓபிஎஸ் தயாராகியுள்ளார் என்று கூறியுள்ளார்.
இரட்டை இலை
இந்தப் போக்கு நீடித்து வருவதால் இரு அணிகளின் இணைப்பு என்பது கேள்விக் குறியாகியுள்ளது. மேலும், இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது.