சசி படத்தை தூக்கி 'கடாசி விட்டு' அதிமுக ஆபீஸ் புனிதத்தை காப்பாற்றுங்கள்... ஓபிஎஸ் அணி அதிரடி
அதிமுக தலைமை கழகத்தில் உள்ள சசிகலா படத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: அதிமுக தலைமை கழகத்தில் உள்ள சசிகலா படத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணி கோரிக்கை விடுத்துள்ளது. சசிகலா படத்தை அகற்றி அதிமுக தலைமை கழகத்தின் புனிதத்தைர காப்பாற்ற வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு போட்டிப் போட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதைத்தொடர்ந்து எப்படியாவது இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்ற முயன்ற டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணைவதில் சிக்கல்
இதன்காரணமாக இரட்டை இலைச்சின்னம் ஓபிஎஸ் அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை காப்பாற்ற எடப்பாடி அணி ஓபிஎஸ் அணியுடன் சேர ஆர்வம் காட்டி வருகிறது.ஆனால் எடப்பாடி ஆதரவு அமைச்சர்களும் நிர்வாகிகளும் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திடீர் முட்டுக்கட்டை
இது தொடர்பாக நேற்று மாலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பி.எஸ். அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் பேச்சு நடத்த இருப்பதாக நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளும் நேற்று இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை வெளியேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியின் சார்பில் கே.பி.முனுசாமி தெரிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தைக்கு திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

சசி படத்தை அகற்றுங்கள்
இந்நிலையில், அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

துயரம் இன்றும் அகலவில்லை
ஜெயலலிதா மறைவினார் ஏற்பட்ட துக்கம் கழகத் தொண்டர்களின் மனதை விட்டு இன்றும் மறையவில்லை. ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தை விட்டு இன்றும் அகலவில்லை.ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல்தான், தமிழகு மக்களின் குரல் தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத்தத்தில் குரல்.

புனிதத்தைக் காப்பாற்றுங்கள்
விசுவாசத் தொண்டர்கள் ஜெயலலிதா மேல் குறையாத பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாமு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மதுசூதனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications