அதிமுக பொறுப்பு பொதுச்செயலாளர் சசிகலா? போயஸ் கார்டனில் அவசர ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வரப்போகிறார்களோ என்று தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் போயஸ் தோட்டத்தில் எம்.பி தம்பித்துரை, முதல்வர் ஓபிஎஸ் உடன் சசிகலா இன்றும் தீவிர ஆலோசனை நடத்தினார்
சென்னை: தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அன்றைய தினமே முதல்வராக ஓ. பன்னீர் செல்வமும், 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அதிமுகவிற்கு அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. கட்சியில் அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, பொதுச் செயலராக வருபவர், முதல்வராக வர வாய்ப்பு அதிகம் என்பதால் அப்பதவியை பெற போட்டி ஏற்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலராக யாரை தேர்வு செய்வது என்ற பேச்சு எழுந்தது. சசிகலா பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப் பட்டார். இதற்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. பொதுச் செயலர், முதல்வர் என முக்கிய பதவிகள் இரண்டிலும், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களே இருப்பதை ஏற்க முடியாது.
பொது செயலர் பதவியை கவுண்டர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதை ஏற்க மறுத்த சசிகலா குடும்பத்தினர், சசிகலாவை பொதுச் செயலராக்க முடிவு செய்தனர். பின் அமைச்சர்களை அழைத்தனர். நேற்று காலை 10:40 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், மதுசூதனன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், போயஸ் கார்டன் சென்றனர். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது.

தம்பித்துரை - ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவுடன் துணை சபாநாயகர் தம்பிதுரை, ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சி. ஸ்ரீநிவாசன், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் இன்றும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தனர்.

வருமான வரி சோதனை
தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு நெருங்கியவர்களாகக் கூறப்படும் சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோரது அலுவலகம், வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள சோதனை மேற்கொண்டனர். இன்றும் இந்த ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முதல் நடத்திய இந்த ரெய்டில் 160 கோடி ரொக்கப் பணம்,127 கிலோ அதிகமான தங்கம், ரூ. 10 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுக்கள் சிக்கியாதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொறுப்பு பொதுச்செயலாளர்
அதிமுகவைப் பொறுத்தவரை, ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுதான் ஆகிறது. அவரது பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளுக்கும் பொறுப்பு பொதுச்செயலாளராக இருக்கலாமா? என்றும் ஆலோசனை நடைபெற்றது. அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவது பற்றியும் இன்றைக்கு ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

யாரால் முடியும்
அதிமுக தொண்டர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வார்களா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக கடந்த 29 ஆண்டுகாலமாக ஒன்மேன் ஆர்மியாக செயல்பட்டு கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. இன்றைக்கு அவரது மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப யாரால் முடியும் என்பதே இன்றைக்கு பலரது கேள்வியாகும்.












Click it and Unblock the Notifications