தாதா சாகிப் பால்கே விருது பெறும் இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு ஓ.பி.எஸ். டுவிட்டரில் வாழ்த்து
தாதா சாகிப் பால்கே விருது பெறும் இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தாதா சாகிப் பால்கே விருது பெறும் மூத்த நடிகரும், இயக்குனருமான கே.விஸ்வநாத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஆந்திராவைச் சேர்ந்த மூத்த நடிகரும், இயக்குனருமான கே.விஸ்வநாத்திற்கு வழங்க விருது கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்று ஒப்புதல் அளித்தார். இதற்கான விழா மே மாதம் 3-ந் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கே. விஸ்வநாத்திற்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தங்கத் தாமரை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசை வழங்க உள்ளார்.
தாதா சகேப் விருது பெறும் கே.விஸ்வநாத், தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சங்கராபரணம், சாகர சங்கமம் ஆகிய திரைப்படங்கள், இந்தியாவின் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
Hearty Congratulations to legendary Director K.Vishwanath Garu on winning the prestigious #DadaSahebPhalkeAward
— O Panneerselvam (@OfficeOfOPS) April 25, 2017
இந்நிலையில் தாதா சாகிப் பால்கே விருது பெறும் இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், புகழ்பெற்ற தாதா சாகிப் பால்கே விருது பெற்ற சாதனை இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.