இது தான் முதல்வர் ஓ.பி. பிரதமருக்கு எழுதிய முதல் கடிதம்!
சென்னை: இலங்கையால் கைது செய்யப்பட்ட 20 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து 206 விசைப் படகுகளில் மீனவர்கள் திங்கள்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகேயுள்ள 3 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 பேரை அவ்வழியாகச் சென்ற இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதேபோல், நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள வெள்ளக்கோயில் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, அவரது மகன் சந்தோஷ், பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொன்னுக்குட்டி, ராசக்கண்ணு, காசிராஜன், குட்டியாண்டியூரைச் சேர்ந்த தாமரைச்செல்வன், மணிகண்டன் ஆகிய 7 பேரும் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடந்த 29-ந் தேதி அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 20 தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னிர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் 20 தமிழக மீனவர்களையும் 75 மீன்பிடி படகுகளையும் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.