இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்

1937 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வந்தார்.
அதே போல் விவசாயத்திற்கு வேதியியல் உரங்களை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். இயற்கை உரம், இயற்கையான உணவுமுறைகளுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை பட்டம் பெற்ற நம்மாழ்வார், கோவில்பட்டி மண்டல பயிர் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு களப்பணி இல்லாமல் நடைபெறும் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அப்பணியில் இருந்து வெளியேறினார்.
விவசாயிகளின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்துக்கு நம்மாழ்வார் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.












Click it and Unblock the Notifications