எமது நோக்கம் உன்னதமானது- பயணம் தொய்வின்றி தொடரும்: தொல். திருமாவளவன்
சென்னை: நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்; இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டது. 4 கட்சிகள் தேமுதிக உடன் இணைந்து 5 ஆனது,தமாகா உடன் இணைந்து 6 கட்சிகள் ஆனது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது விசிகவினரை மட்டுமல்லாது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன்வைத்த ‘மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்.
எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது; தொலைநோக்குப் பார்வை கொண்டது.
நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்; இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.
மக்கள் எங்களுக்கு அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது. ஊழல் கறை இல்லாதது.
நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத விளிம்புநிலை மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் ‘கூட்டணி ஆட்சி' உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications