எது ஆளுமை?
தமிழகத்தை குலுங்க வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்தை நமது அமெரிக்க வாசகர் மாணிக்கம் புகழ்ந்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் காக்க கடந்த 7 நாட்களாக தொடர்ந்து எழுச்சியுடன் போராடி வரும் தமிழ் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்காவின் ஆஸ்டின் நகரிலிருந்து நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு எழுதியுள்ள நெகிழ்ச்சிக் கடிதம்.
சகோதரா,
உன்னை நினைத்து பெருமை என்ற ஒரு வார்த்தை மட்டும் எனக்கு போதவில்லை. தமிழ் அகராதி புரட்டி இதைவிட வீரியம் மிக்க வார்த்தை காணத் தவிக்கிறேன். இந்திய இளைஞர் கூட்டத்தில் இன்று நீ ஒரு தனி வடிவம். உன் அறவழி ஆயுதம், உலக போராட்ட முறை வரலாற்றில் ஒரு மைல் கல். சிகரத்தை முதுகில் சுமந்து மலையேறி, மீண்டும் சிகரம் தொடுகிறாய். உன் எழுச்சி, திமிர் பிடித்த ஆளுமைக்கு, ராட்டை வழி கிடைத்த மிகப்பெரிய சாட்டையடி.

உன் அர்ப்பணிப்பு என் நரம்பு மண்டலம் நுழைந்து ரத்த ஓட்டத்தை துரிதமாக்குகிறது. தமிழன் வந்த வழியை ஆணி வைத்து அடைக்க முற்படுவோர் முகத்தில் அறைய, நீ தேர்ந்தெடுத்த இந்தப் பாதை, நம் ஆற்று வழி நாகரிக மனவலிமைக்கு ஒரு பருக்கைச் சோறு. அரசாங்கம் என்ற ஆளுமையின் ஓங்கிய இரும்பு கரத்தை மண்ணுக்கு உரமாக இட இதைவிடவும் சிறந்த வழி வேண்டுமா? மெய் சிலிர்க்கிறது நண்பனே.!
பதவியும், பணமும் பொய் பேச்சும் தான் ஆளுமைக்கு அடி அகராதி என்று திரியும் அர்த்தமற்ற பதர்களுக்கு, உன் வெறிகொண்ட இந்த அறவழி ஒற்றுமையின் அருகாமை, அவர்கள் எண்ணத்தின் ஆணிவேரையே அசைத்து இருக்கிறது. உலகம் உன்னை இன்று உற்று நோக்குகிறது. வரலாறு உன்னை பதிவு செய்ய எழுத்தாணியின் முனையை கூராக்கி வைத்துள்ளது.
இனி வரும் வருடங்களில் போராட்டம் என்ற வார்த்தைக்கு மறு வடிவம் தேடி யாரும் அலைய மாட்டார்கள். உங்களின் வைரம் பாய்ந்த இந்த இறுமாப்பு ஒன்று போதும் அதை மேலும் செப்பனிட்டு அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும். அணையாப் பெருஞ்சுடராய் எரியட்டும் இந்த தழல் உங்கள் இதயத்தில் எப்போதும்.
என் இருகரம் அகன்ற பாசாத் தழுவலும்..சிரம் தாழ்த்த அன்பும்...என்றும் உங்களுக்கே..!
- மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின். டெக்சாஸ்.












Click it and Unblock the Notifications