கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு! உறவினர்களுக்கு மட்டும் அனுமதி! வெளி அமைப்புகளுக்கு அனுமதி இல்லை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இறுதிச் சடங்கு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் மாணவி ஒருவர் கடந்த கடந்த ஜூலை 13ஆம் தேதி மரணமடைந்தார்.
மாணவி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகப் பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்க மறுத்து மாணவியின் பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

சென்னை ஐகோர்ட்
மாணவியின் உடலை வாங்க மறுத்துப் பெற்றோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராயவு நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அதேநேரம் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

முறையீடு
மாணவிக்கு மறுஉடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னரும் மாணவியின் உடலைப் பெற்றோர் வாங்க மறுத்தனர். இதனிடையே உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கையை வைத்ததுடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது முறையீடு செய்தார்.

ஜிப்மர் மருத்துவர் குழு
இன்று வழக்கு விசாரணையின் போது, மாணவியின் பெற்றோருக்கு நீதிபதி காட்டமான கேள்விகளை எழுப்பினார். நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதி, மாணவியின் உடல் மீது பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என்று காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மாணவியின் உடக்கூராய்வு மற்றும் மறு உடற்கூராய்வை ஜிப்மர் மருத்துவர் குழு ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

நீதிபதி உத்தரவு
இதையடுத்து மகளின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்வதாகப் பெற்றோர் தெரிவித்தனர். அப்போது நீதிபதி சதீஷ்குமார், "நாளை காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாளை மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும். மாணவியின் இறுதிச் சடங்கைக் கண்ணியமான முறையில் நடத்துங்கள். மாணவியின் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
மாணவியின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்ல தீவிர ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்காகத் திருச்சி சரக ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் 3 போலீஸ் கண்காணிப்பாளர்கள், 2 ஏடிஎஸ்பிக்கள் , 20க்கும் மேற்பட்ட காவல் துறை ஆய்வாளர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மாணவியின் உடலைக் கொண்டு செல்வதற்காகத் தனி வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

போலீசார் அறிவிப்பு
இதனிடையே கனியாமூர் பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று காவல்துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஒலிபெருக்கி வாயிலாக மாணவியின் சொந்த ஊரான கடலூர் பெரியநெசலூர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மாணவி இறுதிச் சடங்கில் வெளியூர் ஆட்கள், அமைப்புகள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பும் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என போலீசார் அறிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications