1,000 நாட்களை கடந்த போராட்டம்: பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே.. நடிகர் விஜய்
சென்னை: சென்னை அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 1,000 நாட்களைக் கடந்துள்ள நிலையில், "ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!" என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

இந்த புதிய பரந்தூர் விமான நிலையத்துக்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 1,001-வது நாளாக இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்டத்துக்கு ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது தமது எக்ஸ் பக்கத்தில், மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே! என பதிவிட்டுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய பிரச்சனை
சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இதன் 2-வது
பகுதியாக புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் விளை நிலம் கையகப்படுத்தப்பட்டு 1000-க்கும் அதிகமான பொதுமக்கள் அந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் மத்திய- மாநில அரசுகள் உறுதியாக உள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. ஆனால் பர்ந்தூர் பகுதி பொதுமக்களோ, இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். பரந்தூர் பகுதி விளைநிலங்களைப் பாதுகாக்கவும் வாழ்விடங்களைக் காப்பாற்றவும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நேற்று 1,000-வது நாளை எட்டியது. இதனை முன்னிட்டு நடிகர் விஜய் இன்று பரந்தூர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications