நாயக்கனேரி இந்துமதி எங்கே.. பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் மாயம்.. கடத்தப்பட்டாரா??
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை தொடரில் உள்ள கிராமம் ஒன்றின் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி காணவில்லை. இதுபற்றி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கணவர் அளித்துள்ளார். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை ஒட்டியுள்ள ஜவ்வாது மலைதொடரில் நாயக்கனேரி மலைகிராமம் அமைந்திருக்கிறது. நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்துமதி என்ற பட்டியலின பெண் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மலை கிராம மக்கள் இந்துமதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க ஊர் பஞ்சாயத்தில் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.
இதனால் இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் மலைகிராமத்தைவிட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதியான சனிக்கிழமை மாலை இந்துமதி வீட்டில் இருந்து பால் வாங்கி வருவதாக தனது கணவர் பாண்டியனிடம் தெரிவித்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார். ஆனால் கடைக்கு சென்ற இந்துமதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை .
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன், இந்துமதி எங்கு இருக்கிறார் எனபல இடங்களில் தேடியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை இந்துமதி வீடு திரும்பாததால், பயந்துபோன பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில்," எங்கள் சொந்த ஊர் நாயக்கனேரி ஊராட்சியிலுள்ள காமனூர் தட்டு கிராமம் ஆகும். என் மனைவி இந்துமதிக்கு 25 வயதாகிறது. சில வருடம் முன்பு நடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில், போட்டியின்றி என் மனைவி தேர்ந்தெடுக்கப்பட்டார். நாங்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், எதிர்தரப்பினர், எங்களைச் சார்ந்த ஒன்பது குடும்பங்களையும் ஊரைவிட்டு தள்ளிவைத்துவிட்டார்கள். அவர்கள் தொடர்ந்து, பிரச்னை செய்த காரணத்தால் நாங்கள் ஆம்பூர் அருகே சோலூரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறோம்.
நாங்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என நீதிமன்றத்தில், எதிர் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கிலும், எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த சூழலில் , கடந்த 9-ம் தேதி மாலை 5 மணியளவில் என் மனைவி இந்துமதி, பால் வாங்குவதற்காகக் கடைக்கு போனவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
முன்னாள் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், நாராயணன், நாகராஜ், பூபதி, பாபு, செல்வராஜ் ஆகிய ஆறு பேர் மீதுதான் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்கள்தான் எங்களை எதிர்த்துச் செயல்பட்டார்கள். எனவே, காணாமல்போன என் மனைவி இந்துமதியைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி காவல்துறையினரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என பாண்டியன் கூறியுள்ளார்.
பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவர் மாயமானது,திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் கூறியபடி யாரேனும் கடத்தினார்களா அல்லது அவராகவே வேறு எங்காவது சென்றாரா என்ன நடந்தது என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications